Monday, March 8, 2010
எங்களூர்த்திருவிழா...!
ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி
தேர் திருவிழாவிற்கு நாள் குறித்திருக்க.........
களைகட்டிய ஊரெங்கும்
கதம்பம் கமகமக்க...........
சந்தனம் மணமணக்க............
மஞ்சள் தெளித்து.........
மாவிலை தோரணம் கட்டி............
பந்தக்கால் நட்டு..........
பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும்....
இனிதே துவங்கிய திருவிழா நாளில்
தாய்மார்கள் ஒன்றுகூடி
தானானை கொட்டிவர..........
வேடிக்கை பார்க்க வந்த
இளவட்டக்கூட்டமெல்லாம்
தாவணிப்பெண்களை
கூடி நின்று கேலி செய்ய.............
ஒருபுறம் அபிசேகங்களும்,
ஆராதனைகளும்
அரங்கேறியிருக்க...........
மறுபுறம் பக்திப்பாடல்கள்
செவிகளை
பரவசப்படுத்திக்கொண்டிருக்கும்.
தேரின் ஊர்வலம்
தெருவெங்கும்
ஜொலிஜொலிக்க
பூ, பழமெல்லாம்
வரிசையில் எடுத்து வந்து
பக்தர்கள் பூஜை செய்து
நேர்த்திக்கடன் செலுத்த
கோயில் வாசலில்
உடைந்து சிதறிய
தேங்காயின் சில்லொன்று
எதிரில் நின்றிருந்தவனின்
நெற்றி பிளந்திருக்க
சட்டை பிடித்து
சாதிக்கலவரமாகி
மறுநாள்
தலைப்புச்செய்திகளில்
இருவருக்கு
அரிவாள் வெட்டென்று
வழக்கம்போல் முடிந்திருந்தது
எங்களூர் தேர்த்திருவிழா .....!

good karthik.keep it up
ReplyDelete//கார்த்திகேயன் said...
ReplyDeletegood karthik.keep it up//
வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள் கார்த்திகேயன்!!!