Monday, March 8, 2010

அர்த்தப்படுகிறேன்......


வாழ்க்கைப்பயணத்தின்

இரண்டாம் அத்தியாயமொன்று

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு

திருமண பந்தத்தில்

அனுமதி பெற்ற காதலொன்று

இனிதே துவங்கிவிட்டிருக்க ....

இணைந்துகொள்ளத்தயாராகின்றன

விரல்களும், அறிமுகமற்ற

நம் இதயங்களும்....

வரையறுக்கப்பட்ட இந்த

வாழ்க்கையின் எல்லைக்குள்.....



பின்னிரவின் விளிம்பில்

என்னருகில் நீ அமர்ந்து

நகம் கடிக்கும் முதலிரவில்

உன் அழகை நான் ரசிக்க

நழுவிச்செல்லும் நடுநிசியும்....

இதோ நம் தேகத்தின்

இதமான கதகதப்பை

வரவேற்றுக்காத்திருக்கும்

போர்வைக்குள்

புரியவிருக்கும்

புனிதப்போருக்கு

ஆயத்தமாகின்ற உதடுகள்

மென்மையாய் ஒற்றியெடுத்து காதலை

வார்த்தைகளின்றி மொழிபெயர்க்க

பருவம் பரபரக்க,

அணு அணுவாய் அனுபவிக்க,

எதிரெதிர் துருவங்கள்

இணைகின்ற இனியவோர் துவக்கம்.......!

இரவிலிட்ட முத்தங்களின்

ஈரம் காய்வதற்குள்,

இங்கிதமற்ற இரவும்

சங்கதி புரியாமல்

விடிந்திருக்க.....

பணி நிமித்தமாய்

வெளியில் கிளம்பிவிட்டிருக்க

வாசலில் வந்து

வழியனுப்பும் உன் விரல்கள்

வா என்றே அழைக்கின்றன.....

வெகு விரைவில் வீடு திரும்பும்

நிர்பந்தங்களுடன்

நிபந்தனை முத்தங்கள்

தந்தனுப்பப்படுகிறேன்......


அப்பொழுதுதான்

கிளம்பிவிட்டிருப்பேன்,

என்னில் நிறைந்திருக்கும்

உன் நினைவுகளில்

தெருமுனையில் திரும்பிவிட்டிருக்க

சிணுங்கும் அலைபேசியோடு சேர்ந்து

நீயும் சிணுங்குகிறாய்.....

என்கிருக்கிறேனென்று

அவ்வப்பொழுது உறுதிசெய்துகொண்டு

வைத்த கண் வாங்காமல்

வாசலில் காத்திருக்கிறாய்.....



வீட்டின் முன் கதவை

உட்புற தாளிட்டு ஓடி வந்து

பற்றிக்கொள்ளும் தேகத்தில்

பரவசமடையும் உதடுகள்

பருவ தாகம் தீர்க்க வேண்டி

படுக்கையறை விளையாட்டில்

பகலிரவாட்டம் ஒன்று

விமரிசையாய் துவங்கியிருக்கும்.....



உன் அன்பில்

நான் முழுதும் நனைகிறேன்........

உன் காதலில்

நான் முழுமையடைகிறேன்......

உன் வருகையில்

நான் வாழ்க்கையை ரசிக்கத்துவங்கியிருக்கிறேன்......

உன் காத்திருத்தலில்

நான் அர்த்தப்படுகிறேன்!!!

No comments: