Saturday, March 13, 2010

யுக தாரம்!‏


பட்டாம்பூச்சியாய்

பறந்து திரிந்தவள்

பருவமடைந்தபின்

துணையொன்றின்

அவசியம் கருதி

பெரியோர்களால்

அரிதாரம் பூசி

புதியதோர்

அத்தியாயத்தில்

அவதாரம் எடுக்கும்

அவள் தாரம்....!


பல வண்ணக்

கனவுகள் சுமந்து

உலகம் சுற்றும் ஆசையில்

வலது கால் எடுத்து வைக்க

தொலைந்ததுதான் மிச்சம்

கனவுகளோடு சேர்ந்து

நான்கு சுவர்களுக்குள்....



அங்கே அலுவலகமும்

சக நண்பர்களுமாய்

அவனுக்குக்

காலம் நகர

இங்கே

காத்திருந்து, காத்திருந்து

வெறுமையை வரவேற்று

தனிமை பழகிவிட்டிருக்கத்

தொலைகாட்சி தொடர்களின்

கதாப்பாத்திரங்களே

அவளுக்கான உறவுகளின்

வெற்றிடம் நிரப்பிச்செல்கின்றன.....



சமையல் சுவையென்றும்....

மருதாணி அழகென்றும்.....

சேலையில் சிலையென்றும் ......

கண்ணீர் துடைத்தும் ....

தோள் கொடுத்தும் .....

சுக துக்கங்களில் பங்கெடுத்தும்

அவர்களுக்கான பெரும் பங்கோடு

கரைகிறது புதிர் நிறைந்த வாழ்க்கை.....



எப்பொழுதாவது

எட்டிப்பார்த்துவிட்டுச்செல்லும்

கணவனால் ஞாபகப்படுத்தப்படுகிறது

திருமண உறவொன்று.....

ஒரு வேளை ஞாபகப்படுத்த

மறந்துவிட்டிருக்கக்கூடும்

அவளுக்குள் உறங்கிக்கிடக்கும்

பெண்மையின் உணர்வொன்று....


காலப்போக்கில்

கணவனுக்கான உறவையும்

தொலைக்காட்சிப்பெட்டியே

அபகரித்துவிட்டிருக்க...

கடைசிவரை புரியாமலேயே

வேடிக்கையாய் முடிகிறது

திருமண பந்தமென்னும்

விந்தையான வாழ்க்கை....!



கவலைகளற்று

கண்ணயர்ந்த பொழுதுகள்

வாழ்க்கைப்புத்தகத்தில் வெகுசில

அங்குமிங்குமாய்

ஒட்டிக்கொண்டிருக்க

நாட்காட்டியின் நகர்வைக்கூட

கவனிக்காமல்

அலுவலகமே உலகமென்று

அவனும் உழைத்துக்கொண்டிருக்க

சரிந்து விடுகிறது வாழ்க்கை

சராசரிக்கும் கீழாய்.....

2 comments:

shammi's blog said...

yes niraya per ipdi than valaranga karthik ,
arumayana padhuvu

கவிதன் said...

//shammi's blog said...
yes niraya per ipdi than valaranga karthik ,
arumayana padhuvu//

hmm...