Friday, March 19, 2010

மனமெனும் வனத்தில்.......‏!!!



தனித்து விடப்பட்ட இரவொன்றில்....

நிகழ்வுகளை அசைபோட்டபடி

கனவுகளில் தொலைந்து விடும் முயற்சிகளோடு

புறப்பட்டிருந்தேன் வழிகளைப்பற்றிய கவலைகளின்றி

என் மனமெனும் வனத்திற்குள்....


எதிர்ப்பட்ட உருவங்களெல்லாம்

எதையோ முணுமுணுத்தபடி

என் எதிரில் வந்து பின்

கடந்து செல்கின்றன.....

அதில் அவர்களது குறைகளையும்

கோபங்களையும் கொட்டித்தீர்ப்பதற்கான

ஒத்த கருத்துடைய

ஒரு தேடல் தேங்கிக்கிடக்கின்றது.....



நான் எப்படிப்பட்டவன்

என்பதை யூகிப்பதில்

கவனம் செலுத்துகிறார்களா

என்றெனக்குத்தெரியவில்லை....

அந்தத்தடுமாற்றங்களில்

அவர்கள் தங்களை

தற்காத்துக்கொள்ளும்

முயற்சிகளை

புரிந்துகொள்ள முடிகின்றது.....



ஒருவேளை அவர்கள்

ஏதோவொரு தேவைக்கான

எதிர்பார்ப்புடன்

என் எண்ணங்களில்

நல்லவர்களாக முனையும்

முயற்சிகளும்

இருந்திருக்கக்கூடும்.....



புன்னகைக்கக்கூட நேரமில்லாதவர்களாய்

காட்டிக்கொள்ளும் சிலர்

வழிதவறி

வனத்தின்

குரூரப்பள்ளத்தாக்குகளில்

வீழ்ந்த வண்ணமிருக்கின்றனர்.....



சலனமின்றி நான் என்

பயணங்களில் கவனம் செலுத்த

இருள் கிழித்து

சில ஒளிக்கதிர்கள்

என் கரம் பற்றிக்கொண்டிருக்கின்றன

விடியலுக்கான அறிவிப்பொன்றுடன்......!!!

No comments: