Thursday, March 18, 2010

நீ... நான்..... காதல்.....காதல்......!!!


அந்தக்கார்கால முற்றத்தில்

பட்டுத்தெறிக்கும்

மழைத்துளிகள் அள்ளி

உன் மேனியில் தெளிக்கிறேன்......

அவசரமாய் இடைமறித்து

நீ என் காதைத்திருக,

அப்பாவியாய் நானும் வலிக்கிறதென

முகம் சுருக்கி நடிக்க,

சட்டென்று சிரிப்பு வந்தவளாய்....

வெட்கப்பட்டு அந்தப்பக்கம்

திரும்பிக்கொள்ள

உன் சிவந்த முகத்தை

கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறேன்......



****************************************************************



அப்படி என்னதான்

ரகசியம் சொல்லப்போகிறேனென்று

வெட்கம் கலந்த ஆவலோடு

காதைகொடுக்கிறாய்.....

ஏதோ நான் சொல்லித்தொலைக்க

ச்சீ  என்று சொல்லி அங்கிருந்து நீ ஓட

உன்னை விரட்டிப்பிடித்து சேர்த்து

அணைத்தபோது நெஞ்சில்

சாய்ந்துகொண்டு

என்னை விலகிப் போகச்சொல்கிறாய்.....

அதன் அர்த்தம் புரிந்தவனாய்

இன்னும் இறுக்கி அணைத்துக்கொள்கிறேன்


*******************************************************************



சமையலறையில் உதவி செய்வதாகச்

சொல்லி உன்னை உரசி விளையாடும்

என்னைச்

சற்று தள்ளி நில்லடா என்று

சொல்லி கரண்டியாலே

எச்சரிக்கை செய்கிறாய்.....

ஒற்றை முத்தம் லஞ்சமாய்

தந்தால் மட்டும் நடக்குமென்று

சிறுபிள்ளையாய் அடம்பிடிக்க

புன்னகையோடு என்னைக்கட்டிக்கொள்கிறாய்....

அங்கே கடுகும் , கருவேப்பிலையும்

சண்டையிட்டுக்கொண்டிருக்க

இங்கே நம் இதழ்களும்.....


*********************************************************************



வலிக்காமல் தலையில் கொட்டு வைத்து

கணக்குப்பாடம் கூட தெரியாதா என்கிறாய்....

அடி போடி ,

உன்னையே கணக்குப்பண்ணிய எனக்கு

இதெல்லாம் எம்மாத்திரம்.....

ஒன்றும் ஒன்றும் நான்கென்று வாதிடும் எனக்கு

இன்னும் பத்து மாசம் அவகாசம் கொடு

உன்னை வைத்தே சரியென நிரூபிப்பேன்.....


******************************************************************



நீ தோட்டத்தில் பூப்பறிக்க

பின்னாலிருந்து சட்டென்று தோன்றி

அப்படியே இறுக்கி அணைக்க

அந்தப்பூக்கள் உயரச்சிதறி

நம் மேல் பரவுகிறது.....

திருட்டுப்பயலே என்று சிணுங்கிக்கொண்டே

எங்கே எடுத்துவிடுவேனோ என்று

அவசரமாய்...என் கைகளை இறுகப்பற்றி

இணைத்துக்கொள்கிறாய்....

பூக்கள் கேலி செய்வதையும்

பொருட்படுத்தாமல்

என் நெஞ்சில் உன் விரல்கொண்டு

கோலம் இட்டுக்கொண்டிருக்கிறாய்....


*************************************************************************




நிகழ்ச்சியொன்றில்

நண்பர்கள் ஒன்றுகூடி

ஏதேதோ சுவாரஸ்யமாய்

பேசிக்கொண்டிருக்க யாருக்கும் தெரியாமல்

நான் உன் இடுப்பைக்கிள்ள

துள்ளிக்குதித்த உன்னை

என்ன ஆச்சு என்று  எல்லோரும் கேட்க

ஒன்றுமில்லை எறும்பு என்று

சமாளித்து வழியும் உன் முகத்தைபார்த்து

குறும்பாய் சிரிக்க

இருடா ,

உன்னை அப்புறமா வச்சுக்கிறேன் என்கிறாய்...

அதெல்லாம் முடியாது

நான்தான் உன்ன காலம்பூரா வச்சுக்குவேன்.....


***************************************************************



உன்னை மடியில் கிடத்தி

தலை மயிர் வருடிக்கொண்டே

தேவதை கதைகள் சொல்ல

ரசித்துக்கிடந்த உன் கன்னத்தை

அவசரமாய் கடித்துவிட்டு எழுந்து

ஓடுகையில் குச்சியெடுத்து

என்னை விரட்டிப்பிடித்து

இன்னொரு கன்னத்தை  காட்டுகிறாய்......

அதையும் கடித்து வைக்கவாம்....!


****************************************************************